Published : 31 Mar 2018 08:06 AM
Last Updated : 31 Mar 2018 08:06 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் முத்துக்கருப்பன் கூறியதாவது:

காவிரி விவகாரம் தொடர்பாக, நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். அப்போது பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் இருந்தனர். அவர்கள் ஒன்றும் பேசவில்லை. இந்த விவகாரத்தில் அதிமுகவை அதிகமாக ‘டேமேஜ்’ செய்துவிட்டனர். நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். கண்டிப்பாக ஓரிரு தினங்களில் நாடாளுமன்றம் கூடும்போது குடியரசு துணைத்தலைவரிடம் ராஜினாமா கடிதம் அளிப்பேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் எனது தலைவர்கள்தான். இருவரையும் மதிக்கிறேன். ராஜினாமா என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவர்களிடம் நான் கேட்கவில்லை. தற்கொலை செய்து கொள்வதால் எதுவும் நடக்காது. முதல்வரும், துணை முதல்வரும் எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டாம், தொடர்ந்து போராடுங்கள் என்று கூறுகின்றனர். இருப்பினும் நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், முத்துக்கருப்பனை தொடர்புகொண்டபோது ‘தி இந்து’விடம் அவர், ‘‘கட்சித் தலைமையில் இருந்து யாரும், என்னிடம், நான் பேசியது தொடர்பாகக் கேட்கவில்லை. நான் தஞ்சையில் உள்ளேன். இங்கு மக்கள், நான் பேசியதுதான் சரி என்று என் கருத்தை ஆமோதிக்கின்றனர்’’ என்றார்.

முன்னதாக, கடந்த 29-ம் தேதி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கோ.அரி, குமார், அருண்மொழித்தேவன் ஆகியோர், தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து, தலைமை உத்தரவிட்டால் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தனர். அப்போது, ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் கூறியதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x