Published : 19 Mar 2018 11:05 AM
Last Updated : 19 Mar 2018 11:05 AM

மூன்று மாதங்களுக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதி: உற்சாகத்தில் தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி மூன்று மாதங்களுக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் சென்றது அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி. இந்நிலையில், அவர் உடல்நிலை தேறிவருவதை உணர்த்தும் வகையில் அவ்வப்போது வீடியோ பதிவுகள் வெளியிடப்படும்.

சமீபத்தில், மு.க.தமிழரசுவின் பேரனை பார்த்து கருணாநிதி சிரிக்கும் வீடியோவும், கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்றார்.

இந்நிலையில், கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரை முருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்றனர். அண்ணா அறிவாலயத்தில் சிறிது நேரம் இருந்த கருணாநிதி மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்கு புறப்பட்டார்.

ஓய்விலிருக்கும் கருணாநிதி இரண்டாவது முறையாக அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்ததால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x