Published : 25 Mar 2018 09:55 AM
Last Updated : 25 Mar 2018 09:55 AM

போக்குவரத்து விதிகளை விளக்க ரூ.1 கோடியில் சிறுவர் பூங்கா: சென்னை மாநகராட்சி அமைக்கிறது

சென்னை மாநகராட்சி சார்பில் போக்குவரத்து விதிகள் மற்றும் குறியீடுகள் குறித்து விளக்கும் வகையில் ரூ.1 கோடியே 85 லட்சம் செலவில் போக்குவரத்து சிறுவர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

வருங்காலத் தலைமுறையினரை சாலை விபத்துகளை ஏற்படுத்தாத தலைமுறையாக உருவாக்கும் விதமாக, போக்குவரத்து விதிகள் மற்றும் குறியீடுகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரூ.1 கோடியே 85 லட்சம் செலவில் போக்குவரத்து சிறுவர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதற்காக நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா நினைவிடம் இடையே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு படக்காட்சி

இப்பூங்காவில், சாலை கள் அமைக்கப்பட்டு சிக்னல்கள், சாலையை கடக்கும் குறியீடுகள், வேகத்தடை வர இருப்பதற்கான குறியீடுகள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகள் குறித்த குறியீடுகள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும். அந்த பூங்காவுக்கு வரும் சிறுவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும். அதை எடுத்துக்கொண்டு பூங்காவில் உள்ள சாலை யில் போக்குவரத்து விதிகளை மதித்துச் செல்ல வேண்டும்.

மேலும் அப்பகுதியில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு படக்காட்சிகளும் திரையிடப்பட உள்ளன.

மெரினா கடற்கரைக்கு வருவோர், தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவில் நேரத்தை செலவிட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்காகவே போக்குவரத்து சிறுவர் பூங்கா இப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கும் எதிர்கால சந்ததி உருவாக வாய்ப்புள்ளது. இந்த போக்குவரத்து சிறுவர் பூங்கா அமைக்க ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளன. அதற்கான டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்ததாரருக்கு பணிகளைத் தொடங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x