Last Updated : 09 Mar, 2018 08:02 PM

 

Published : 09 Mar 2018 08:02 PM
Last Updated : 09 Mar 2018 08:02 PM

அடுத்தாண்டு முதல் சிறந்த 3 குறும்படம், ஆவணப்படங்களுக்கு மாணிக் சர்க்கார் பெயரில் விருதுகள்: எடிட்டர் லெனின்

அடுத்தாண்டு முதல் சிறந்த 3 குறும்பட, ஆவணப்படங்களுக்கு மாணிக் சர்க்கார் பெயரில் விருதுகள் வழங்கப்படும். அதற்காக ரூ.10 ஆயிரம் விருது தொகை வழங்க முடிவு எடுத்துள்ளேன் என்று எடிட்டர் லெனின் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 7-வது ஆண்டாக சர்வதேச ஆவணப்பட, குறும்படத் திருவிழா புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேரு கலையரங்கில் இன்று தொடங்கி 11-ம் தேதி வரை நடக்கிறது. மும்பை மத்திய திரைப்படப்பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடக்கும் இந்நிகழ்வை திரைப்பட இயக்குநர் கோபி நயினார் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.

அதையடுத்து அவர் பேசியதாவது:

திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படங்கள் சமூக வாழ்க்கைக்கு எதிரான கட்டமைப்பாகவே உள்ளது. அதற்கு எதிர் இயக்கமே குறும்படங்கள். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை கலை வடிவில் கவனிக்கும் பார்வையை தரும் பணியை இப்படைப்பாளிகள் செய்கிறார்கள்.

பெரும் சமூக பார்வையை வணிகமாக்குகின்றன திரைப்படங்கள். குறிப்பாக அரசுகளுக்கு ஆதரவாகவே இப்படங்கள் உருவாகின்றன. அப்படி செய்ய இயலுமா என்று கேள்வி எழுந்தாலும் அப்படிதான் நடக்கிறது என்று குறிப்பிட்டார்.

திரைப்பட எடிட்டர் லெனின் பேசுகையில், "சென்னை பல்கலைக்கழகத்தில் ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிட இடம் கேட்டும் இதுவரை தரவில்லை. பலமுறை எடுத்துக்கூறினாலும் இதுவரை நடக்கவில்லை. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 7-வது ஆண்டாக அனுமதி தருகிறார்கள். கலை விஷயத்தில் புதுச்சேரியும், திருவண்ணாமலையும் முன்னோடியாக உள்ளன. அடுத்த ஆண்டு முதல் குறும்படம், ஆவணப்படங்களுக்கு மாணிக் சர்க்கார் பெயரில் விருதுகள் தரப்படும். முதல் 3 இடங்களுக்கான விருதுகளும் மாணிக் சர்க்கால் பெயரிலேயே தர விருப்பம். அதற்கு ரூ.10 ஆயிரம் தர முடிவு எடுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசுகையில், "கருத்து சுதந்திரம் படைப்பு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் நிகழும் சூழல் உள்ள காலமிது. குறும்படங்கள், ஆவணப்படங்கள் உண்மையின் பக்கம் நிற்கிறது. உண்மையைப் பேசும் கலைஞர்களும், எழுத்தாளர்களும் சமூகத்தின் மனசாட்சி. அவர்கள் பேசாப்பொருளையும் பேசுபவர்கள்" என்று குறிப்பிட்டார்.

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்ற 12 படங்களும், தமிழகத்தைச் சேர்ந்த இளம் இயக்குநரின் 12 குறும்படங்களும் திரையிடப்படுகிறது. இவற்றில் 16 தமிழ்த் திரைப்படங்களும், பிற இந்திய மொழி படங்களும் இடம்பெறுகிறது. அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. விழாவின் முதல் படமாக சிரியா பற்றிய 'சிட்டி ஆப் ஹோஸ்ட்' ஆவணப்படம் திரையிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x