Published : 12 Sep 2014 10:42 AM
Last Updated : 12 Sep 2014 10:42 AM
கர்நாடக காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்து கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தற்போது வட மாநிலத்தில் தலைமறைவாக உள்ள மலைவாழ் விவசாயி ராவணன் என்பவர், தமிழக அரசிடம் சரணடைய தயாராக இருப்பதாக ஜூலியஸ் என்ற சமூக ஆர்வலர் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர் களிடம் ஜூலியஸ் கூறியதாவது:
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்தவர் ராவணன். மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர். சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான இவர் மீது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில், குட்டி வீரப்பன் என்பவருடன் சேர்ந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக கர்நாடக காவல் துறையினர் அவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அவரை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுவதாக அறிந்த அவர் தலைமறைவானார்.
வட மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவரை சந்தித்தபோது தமிழக அரசிடம் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு என்கவுன்ட்டர் செய்துவிடும் என்பதால் ஊர் ஊராகச் சுற்றித் திரியும் அவர், தமிழக அரசு தன்னை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக காவல்துறையின் நடவடிக் கையால் இது வரை 20-க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
ஏற்கெனவே சின்னபி (எ) மோட்டோ சரணடைய விருப்பம் தெரிவித்தபோது கர்நாடக காவல் துறை நடவடிக்கையால் அவர் சரணடைய முடியாமல் போனது. கர்நாடக காவல் துறையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதால் என்னையும் கர்நாடக அரசு என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளது.
எனவே, தமிழக, கர்நாடக அரசுகள் இப்பிரச்சினை குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடைய விருப்பம் தெரிவித்துள்ள ராவணனை சரணடைய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக காவல்துறையால் பாதிக்கப்படுவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் எனக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.
பேட்டியின்போது, ராவணன் பேசிய ஒளி, ஒலிப்பதிவை செய்தியாளர்களிடம் ஜூலியஸ் காட்டினார். கண்ணீருடன் பேசும் ராவணன், கர்நாடக காவல்துறையினரிடம் இருந்து தன்னைக் காக்குமாறு தமிழக அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள் அதில் இடம்பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT