Last Updated : 08 Mar, 2018 08:06 PM

 

Published : 08 Mar 2018 08:06 PM
Last Updated : 08 Mar 2018 08:06 PM

சர்வதேச ஆவணப்பட- குறும்படத் திருவிழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடக்கம்: முக்கிய இயக்குநர்கள் பங்கேற்பு

சர்வதேச ஆவணப்பட- குறும்படத்திருழிவா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. தொடக்க நிகழ்வில் இயக்குநர் கோபி நயினாரும், நிறைவு விழாவில் இயக்குநர் திவ்யபாரதியும் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

புதுச்சேரியில் 7-வது ஆண்டாக சர்வதேச ஆவணப்பட- குறும்படத்திருவிழா நாளை தொடங்குகிறது. மும்பை மத்திய திரைப்படப்பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடக்கும் இந்நிகழ்வு புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேரு கலையரங்கில் நாளை (மார்ச் 9) காலை தொடங்கி 11-ம் தேதி வரை நடக்கிறது.

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்ற 12 படங்களும், தமிழகத்தைச் சேர்ந்த இளம் இயக்குநரின் 12 குறும்படங்களும் திரையிடப்படுகிறது. இவற்றில் 16 தமிழ்த் திரைப்படங்களும், பிற இந்திய மொழி படங்களும் இடம்பெறுகிறது. அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த திரைப்படங்களும் திரையிடப்படுகிறது.

இவ்விழாவை அறம் திரைப்பட இயக்குநர் கோபி நயினார் தொடங்கி வைக்கிறார். விழாவில் எடிட்டர் லெனின், இயக்குநர் சிவக்குமார், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவின் முதல் படமாக சிரியா பற்றிய 'சிட்டி ஆப் ஹோஸ்ட்' ஆவணப்படம் திரையிடப்படுகிறது.

திரைப்பட விழாவில் முதல் நாள் பத்து படங்களும், இரண்டாம் நாள் 15 படங்களும், 3-ம் நாள் பத்து படங்களும் மூன்று நாட்களில் 35 படங்கள் திரையிடப்படுகிறது. விவசாயம், சுற்றுச்சூழல், கல்வி, சமூகப் பிரச்சினைகள், பெண்கள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியவை குறித்து இப்படங்கள் பேசுகின்றன.

நிறைவு நாளான வரும் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் எழுத்தாளர் உதயசங்கர், இயக்குநர் திவ்யபாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x