Published : 19 Mar 2018 04:20 PM
Last Updated : 19 Mar 2018 04:20 PM
ராமநாதபுரத்தில் வீட்டின் அருகிலேயே பள்ளி ஆசிரியை ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் கணவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் நகர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(42). சொந்தமாக சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா(40). தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர், இன்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட வீட்டின் பின்புறம் துணிக்காயப் போட்டுக்கொண்டிருந்த சண்முகப்பிரியா நைட்டி உடையுடன் வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. கழுத்தும் கத்தியால் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் பஜார் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சண்முகப்பிரியாவுக்கு யாருடனும் பகை கிடையாது, திருடர்கள் யாரும் வந்து கொலை செய்தது போலவும் தெரியவில்லை, காரணம் கொலை செய்யப்பட்ட சண்முகப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த செயின் அப்படியே இருந்தது, மேலும் வீட்டுக்கு வெளியே சண்முகப்பிரியா கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்பதும் போலீஸாரின் சந்தேகத்தை கிளப்பியது.
முதலில் கொடி கட்டும் கயிறால் சண்முகப்பிரியா கழுத்தை இறுக்கிய கொலையாளி அது முடியாததால் அவர் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு போயிருக்கிறார் என போலீஸார் சந்தேகப்பட்டனர். கொலை பற்றி சண்முகப்பிரியாவின் கணவர் மோகன்ராஜுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து அவரை போலீஸார் விசாரித்தனர். அப்போது மோகன்ராஜ் மனைவி கொலை செய்யப்பட்டதற்கான கவலையோ, பதற்றமோ இன்றி அடுத்தவர் வீட்டில் நடந்த கொலை போல் பதிலளித்துக்கொண்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தி எத்தகையது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மோகன்ராஜ் மனைவியை கொலை செய்தாரா? என்ற சந்தேகம் போலீஸாருக்கு வலுத்ததால் அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகிறார்கள். கணவர் கொலை செய்திருந்தால் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும்.
வீட்டின் பின்புறம் காலையில் நடந்த கொலை அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT