Published : 13 Mar 2018 09:17 AM
Last Updated : 13 Mar 2018 09:17 AM

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு: லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்கள் செல்ல வேண்டாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இலங்கை அருகே நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என்பதால், மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

இந்தியப் பெருங்கடலில் இலங்கை, குமரிக்கடல், மாலத் தீவு பகுதிகளுக்கு அருகே வலு வான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் மாலத் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதனால், குமரிக்கடல் மற்றும் தெற்கு கேரளாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே, அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தெற்கு கேரள கடல் பகுதி, மாலத்தீவு பகுதிகளின் அருகே மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற பிறகு, லட்சத்தீவு பகுதியை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் 15-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்து வரும் 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x