Last Updated : 12 Mar, 2018 06:30 PM

 

Published : 12 Mar 2018 06:30 PM
Last Updated : 12 Mar 2018 06:30 PM

புதுச்சேரி கூட்டுறவு வங்கி முறைகேடுகளுக்கு அரசியல் தலையீடே காரணம்: கிரண்பேடி

புதுச்சேரி கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு அரசியல் தலையீடுதான் காரணம் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியில் அமைப்பு சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கான நடவடிக்கைகள் என்ற தலைப்பில் நபார்டு வங்கி சார்பில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள மாநில கூட்டுறவு வங்கியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் தனித்தனியாகவும் எழுத்துப்பூர்வ கருத்துகளையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகளில் தகுதிவாய்ந்த ஊழியர்கள் பணியாற்றவில்லை. இங்கு பணிபுரியும் பலருக்கு அன்றாட வங்கிப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதுகூட தெரியவில்லை. ஊழியர்கள் தற்போதுள்ள வங்கிகளின் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு பயிற்சி பெற்று பணியாற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு அரசியல் தலையீடுதான் காரணம்.அரசியல் வாதிகளின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வங்கிக் கடன் கிடைக்கும் என்ற நிலைமாறி தகுதிவாய்ந்த அனைவருக்கும் வங்கிகடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ஆய்வைத்தொடர்ந்து ராஜ்நிவாஸ் திரும்பிய ஆளுநர் கிரண்பேடி இதுதொடர்பாக வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:

''புதுவை அரசு மாநில கூட்டுறவு வங்கிகளில் குறிப்பிட்ட சில உதவிப் பொது மேலாளர்களை இடமாற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மாநில கூட்டுறவு வங்கிக்கு 6 வாரங்களுக்குள் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளரை அயல்பணி அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். இதன் மூலம் வங்கிகள் உரிய வகையிலும், தேவையற்ற குறுக்கீடுகள் இல்லாமலும் இயங்க முடியும்'' என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x