Published : 08 Mar 2018 11:13 AM
Last Updated : 08 Mar 2018 11:13 AM

வாகன சோதனையின்போது பெண் பலியானதை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: போலீஸார் மீது கல் வீச்சு; வாகன கண்ணாடி உடைப்பு- 15-க்கும் மேற்பட்டோர் காயம்

திருச்சி துவாக்குடியில் ஹெல்மெட் வாகன சோதனையின்போது பெண் பலியான சம்பவத்தில், தொடர்புடைய இன்ஸ்பெக்டரை கைது செய்யக் கோரி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீஸார் மீதும், அவர்களது வாகனங்கள் மீதும் சிலர் கல்வீசி தாக்கினர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

திருச்சி துவாக்குடி பகுதியில் நேற்றிரவு வாகன சோதனையின்போது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் விரட்டிச் சென்று, எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜா, இவரது மனைவி உஷா ஆகியோர் கீழே விழுந்தனர். இதில், உஷா அந்த இடத்திலேயே இறந்தார். ராஜா காயமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாரை கண்டித்து பெல் கணேசபுரம் ரவுண்டானா பகுதியில் இரவு 8 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு 11 மணிக்கு மேலும் நீடித்த இந்த மறியலில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த மறியலால் திருச்சி- தஞ்சை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ-க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் பயிற்சி எஸ்.பி அரவிந்த் மேனன், மாநகர காவல் துணை ஆணை யர் சக்தி கணேசன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.

ஆனால், இந்த சம்பவத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து, மறியல் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வர வேண்டும். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவர்கள் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசினர். அத்துடன், மறியலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், கூடுதலாக அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்த அதிரடிப்படை போலீஸார் வந்த வேன் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் போலீஸார் மீதும் கற்களை வீசினர். இதையடுத்து, அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்ஸ்பெக்டரும் அனுமதி...

இதற்கிடையே, தம்பதியினர் சென்ற மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தபோது, இன்ஸ்பெக்டர் காமராஜூம் கீழே விழுந்து காயமடைந்தாராம். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆட்சியர், எஸ்.பி விரைவு

சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்சியர், காவல் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஆட்சியர் ராஜாமணி, எஸ்.பி கல்யாண் ஆகியோர் நேற்றிரவு திருச்சிக்கு புறப்பட்டுள்ளனர்.

5 ஆண்டுக்கு பின் கர்ப்பம்

கடந்த 5 ஆண்டுக்கு முன் ராஜாவை காதலித்து திருமணம் செய்த உஷா தற்போது தான் கர்ப்பமடைந்துள்ளார். துவாக்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தபோது, இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x