Published : 31 Mar 2018 08:17 AM
Last Updated : 31 Mar 2018 08:17 AM

ஆர்டர்லி போலீஸாரின் உண்மை விவரங்களை அனுப்ப வேண்டும்: உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்க்கும் ஆர்டர்லி போலீஸாரின் உண்மை விவரங்களை அனுப்ப வேண்டும் என்று காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்களுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் வீட்டில் பணி புரியும் ஆர்டர்லி முறையை ஒழிக்க கடந்த 1979-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் இன்று வரை ஆர்டர்லி முறை ஒழிக்கப்படவில்லை.

நீதிபதி கண்டனம்

இதுகுறித்து ஒருவர் தொடுத்த வழக்கின்பேரில், உயர் அதிகாரிகள் வீட்டில் எத்தனை போலீஸார் ஆர்டர்லியாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 22-ம் தேதி போலீஸார் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஆர்டர்லியாக யாருமே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருபாகரன், இந்த பதில் மனுவை தயார் செய்த ஏஐஜி மகேஷ்வரன் ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றார்.

மேலும், அதே தினத்தில் எத்தனை பேர் ஆர்டர்லியாக உள்ளனர் என்பது குறித்து உண்மை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லி போலீஸாக வேலை செய்பவர்களின் உண்மையான பட்டியலை அனுப்பி வைக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x