Published : 08 Sep 2014 03:09 PM
Last Updated : 08 Sep 2014 03:09 PM
நேபாளத்தின் சன்கோசி நதிக்கரையில் நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கையான அணை உடைந்ததால், அந்நாட்டு எல்லையை ஒட்டியுள்ள இந்திய கிராமங்கள் பல மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவை சீனாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை அடித்து செல்லப்பட்டது.
மேலும், அங்கு மழை நீடித்தால் இந்த அணை உடைப்பால் இந்திய எல்லையோர கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திபெத்திலிருந்து பாயும் சன்கோசி நிதி, நேபாளம் வழியாக பிஹாரில் வந்து கங்கையில் இணைகிறது. இந்த நிலையில் நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிந்துபல்சோக் என்ற பகுதியில் இயற்கையான அணைக்கட்டு ஒன்று உருவானது.
இந்த அணை உடைந்து ஏற்படும் அபாயத்தை தடுப்பதற்காக, நேபாள ராணுவத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், திடீரென உருவான ஆறுகளை வழி மாற்றும் பணிகளிலும் ஈடுப்பட்டனர்.
குண்டுகளை வைத்து அணையை தகர்க்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இயற்கையாக உருவான அணை திடீரென உடைந்தது.
இதனால், அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேண்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கால் சிந்துபல்சோக் பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த அணை உடைப்பால், வெள்ளம் பெருக்கெடுத்தால் நேபாள எல்லையை ஒட்டிய இந்திய கிராமங்கள் பல மூழ்கும் அபாயம் உள்ளதாக நேபாள அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மழை வெள்ளம், திடீர் நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கத்தால் சுமார் 200 பேர் பலியாகினர். இயற்கை பேரழிவுகளால் சுமார் 22,000 மக்கள் பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT