Published : 12 Mar 2018 08:54 AM
Last Updated : 12 Mar 2018 08:54 AM

தமிழகத்தில் 2-வது தவணையாக 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

தமிழகத்தில் 2-வது தவணையாக 65.9 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகளில், 66 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பின்னர் சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாக சென்று விடுபட்ட 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலை யில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள், சுங்கச் சாவடிகளில் 1,652 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 ஆயிரம் வாகனங்கள் மூலம் சென்ற பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கினர். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடந்தது. பெற்றோர் ஆர்வமாக தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். விடுபட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க வசதியாக சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தையின் கை விரலில் அடையாளத்துக்கு மை வைக்கப்பட்டது.

முன்னதாக காலை 8.30 மணியளவில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறும்போது, “தமிழகத்தில் ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதனால் தமிழகம் கடந்த 14 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இதில் 65.9 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்கு அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம். ஒரு வாரத்தில் கிராமப்புற செவிலியர்கள் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவர்” என்றார்.

சென்னையில் 5 வயதுக்குட்பட்ட 7.11 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,640 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 6,700 பேர் பணியில் ஈடுபட்டனர். முகாமின் முடிவில் 6.7 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x