Published : 11 Mar 2018 10:10 AM
Last Updated : 11 Mar 2018 10:10 AM

பாதுகாப்பு காரணங்களுக்காக ரவுடி பினு உட்பட 6 பேரை வேலூர் சிறைக்கு மாற்ற முடிவு

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு உட்பட 6 பேர் வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரவுடி பினு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

தலைமறைவாக இருந்துவந்த அவர், சென்னையில் உள்ள லாரி ஷெட்டில் தனது பிறந்தநாள் விழாவை விமரிசையாக கொண்டாடினார்.

இந்த விழாவில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டனர். இதையறிந்த காவல்துறையினர் அங்கு சென்று 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ரவுடி பினு தப்பியோடினார். பின்னர் போலீஸில் சரணடைந்த ரவுடி பினுவை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், புழல் சிறையில் பினு மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், மற்ற சிலருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, பாதுகாப்புக் கருதி பினு உள்ளிட்ட 6 பேரை வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு மாற்றுவதற்கான நகல், வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரவுடி பினு விரைவில் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுவார் என வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x