Published : 19 Mar 2018 07:44 AM
Last Updated : 19 Mar 2018 07:44 AM

அரசு விரைவு பேருந்துகள் நின்று செல்ல 50 புதிய நிறுத்தங்கள் ஏற்படுத்த முடிவு: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைகிறது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வசதியாக அரசு விரைவு பேருந்துகளுக்கு 50 புதிய நிறுத்தங்கள் விரைவில் தேர்வு செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 7 புதிய நிறுத்தங்களும் இடம் பெறுகின்றன.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதுதவிர மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் போன்ற போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் மாநகரங்களின் எல்லை விரிவடைந்து, பேருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, மாநகரங்களையொட்டி விரிவாக்கப்பட்டுள்ள பகுதியில் கூடுதலாக புதிய நிறுத்தங்களை உருவாக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு அரசு போக்குவரத்து கழகங்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை சிறிய அளவில் குறைந்துள்ளது உண்மைதான்.

இருப்பினும், போதிய அளவில் பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தால், மீண்டும் மக்கள் அரசு பேருந்துகளில் அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, முதல்கட்டமாக வரும் கோடை விடுமுறையொட்டி புதிய பேருந்துகளை அதிகரித்து இயக்கவுள்ளோம். இன்னும் 2 மாதங்களில் 2000 புதிய பேருந்து கள் வாங்கப்பட்டு, பழைய பேருந்துகள் படிப்படியாக நீக்கப்படும்.

3 சொகுசு இருக்கை

குறிப்பாக, நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக ஒரே வரிசையில் 3 சொகுசு இருக்கை (2+1), ஏசி, படுக்கை வசதி, தொலைக்காட்சி, செல்போன் சார்ஜ் போடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டதாக பேருந்துகள் இருக்கும்.

மாநகரங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வசதியாக 50 புதிய நிறுத்தங்களை விரைவில் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, சென்னையில் மத்திய கைலாஷ், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம், பல்லாவரம் உட்பட 7 நிறுத்தங்கள் இடம் பெறும். இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதலாக வருவாயும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x