Published : 28 Mar 2018 09:07 AM
Last Updated : 28 Mar 2018 09:07 AM

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்- மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் சென்னை வள்ளு வர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷ மிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:

நாட்டில் 1989-ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்து வரும் எஸ்சி, எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் கடந்த 20-ம் தேதி வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது. தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், வன்முறைகளும் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் நடந்து வருகின்றன.

மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசுகள், மதத்தால், ஜாதியால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளன. தலித்கள், பழங்குடியினருக்கு எதிராகவும், அவர்கள் நலனில் அக்கறையின்றியும் செயல்பட்டு வருகின்றன. இத்தகையச் சூழலில் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதால் தலித்கள், பழங்குடியினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.

எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநரிடம் மனு கொடுக்க இருக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x