Published : 27 Mar 2018 08:27 PM
Last Updated : 27 Mar 2018 08:27 PM

சட்டப் பல்கலைக்கழக முறைகேடு; லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு: விவேக் ஜெயராமனும் சிக்கினார்

 சட்டப் பல்கலையில் விதிமுறைகளை மீறி வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனனர். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

முதல்கட்ட விசாரணையில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் எல்எல்பி படிப்பில் சேர விதிமுறைகளுக்கு முரணாக இடம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக  லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்ததையடுத்து, அவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இதில் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. வணங்காமுடி சட்டவிரோதமாக என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துள்ளார் என்று புகார் கூறப்பட்டது. கடந்த 2016-17ம் ஆண்டில் 93 மாணவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டில் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்துள்ளது, இதில் 18 பேருக்கு மட்டுமே முறையான ஆவணங்கள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்தனர்.

மீதமுள்ள 75 மாணவர்களுக்கு அனுமதி அளித்ததில் எந்தவிதமான முறையான ஆவணங்களோ, சான்றிதழ்களோ இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வெளிநாடு வாழ் பெற்றோர், வெளிநாடு வாழ் பாதுகாவலர், ஸ்பான்ஸர் ஆகிய 3 பிரிவுகளில் 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இதில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் எல்எல்பி ஹானர்ஸ் பிரிவில், வெளிநாடு வாழ் இந்தியர் ஸ்பான்சர் பிரவில் எல்எல்பி படித்துள்ளார். ஆனால், இவரின் விண்ணப்ப மனுவில் எந்தவிதமான அத்தியாவசிய சான்றிதழ்களும், இந்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் அளித்த என்ஆர்ஐ சான்றிதழும் இல்லை, என்ஆர்ஐ உறவினர்களுக்கு உரிய சான்றுகளும் இல்லை. அதுமட்டுமல்லாமல், பெற்றோரின் ஒப்புதல் கையெப்பம், தகுதிச் சான்றிதழ் ஏதும் இல்லை. இதையடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவித்தனர்.

இதனால், விவேக் ஜெயராமனிடம் எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் பேராசிரியர்கள் கே.எஸ்.சர்வானி, தொலைநிலைக்கல்வி துறை பதிவாளர் வி. பாலாஜி, துணை பதிவாளர் எஸ்.கே. அசோக் குமார், பேராசிரியர் டி. ஜெய்சங்கர், நிர்வாக அதிகாரி கே.ராஜேஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டில் 74 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.

இதற்கிடையே, விவேக் ஜெயராமன் விண்ணப்பித்துள்ள முகவரி சரியானது தானா என்பது குறித்து விசாரித்தபோது, அதில், மன்னார்குடியில் உள்ள மன்னை நகரில் திவாகரன் வீட்டுக்கு எதிராக விவேக் ஜெயராமன் குறிப்பிட்டுள்ள வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ராஜகோபாலன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. மன்னார்குடிக்கு வரும்போது விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் இந்த வீட்டில் தங்குவார்கள். மற்ற நேரங்களில் இந்த வீடு பூட்டியே இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x