Last Updated : 01 Mar, 2018 04:11 PM

 

Published : 01 Mar 2018 04:11 PM
Last Updated : 01 Mar 2018 04:11 PM

வீராணம் தண்ணீர் நிறுத்தம்: சென்னைக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல்?

 

வீராணம் ஏரியில் தண்ணீர் அளவு இரண்டு அடிக்கும் கீழே சென்றதால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.  இதனால் சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரின் அளவு கடந்த சில தினங்களாகவே குறைந்து வந்தது. தற்போது அது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

இதையடுத்து 47.50 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரியில் வெறும் 2 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் வீராணம் தண்ணீரை சென்னைக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது இன்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கோவிந்தராஜ் கூறுகையில், ''வீராணம் ஏரியில் இருந்து சென்னை மட்டுமின்றி, சிதம்பரம், காட்டுமன்மார்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏரி வறண்டு விட்டதால் தண்ணீர் அனுப்ப முடியாத சூழல் உள்ளது.

தண்ணீர் உறிஞ்சும் குழாய்களில் தண்ணீர் ஏறாத நிலை உள்ளதால் தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் பரவனூர் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அனுப்ப முடியுமா? என ஆலோசித்து வருகிறோம்'' எனக் கூறினார்.

வீராணம் தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x