Last Updated : 23 Mar, 2018 07:05 PM

 

Published : 23 Mar 2018 07:05 PM
Last Updated : 23 Mar 2018 07:05 PM

புதுச்சேரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் ரவுடி வெட்டிப் படுகொலை

புதுச்சேரியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்கி (எ) சரவணன் (19). இந்நிலையில் இன்று கதிர்காமம் காந்தி நகர் அருகே வழுதாவூர் சாலையில் ஜாக்கி மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் பைக்கில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜாக்கியை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் ஜாக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீஸ் டிஐஜி ராஜிவ் ரஞ்சன், எஸ்பி ரட்சனா சிங், டிநகர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து டிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஜாக்கி மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன. கொலை தொடர்பாக பழிக்குப் பழியாக ஜாக்கி கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் கொலை நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x