Published : 27 Mar 2018 12:47 PM
Last Updated : 27 Mar 2018 12:47 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் முன்பு, ஜெயலலிதாவின் தனி பாதுகாவலராக இருந்த வீர பெருமாள் ஆஜரானார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இந்நிலையில், அணிகள் இணைப்புக்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பு கோரிக்கை முன்வைத்தது.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். நீதிபதி ஆறுமுகசாமி கடந்தாண்டு நவம்பர் மாதம் விசாரணையை தொடங்கினார்.
இந்நிலையில், விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் தனி பாதுகாவலராக இருந்த வீர பெருமாளுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அதன்படி, இன்று (செவ்வாய்கிழமை) சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணை ஆணையம் அலுவலகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு வீரபெருமாள் ஆஜரானார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வீரபெருமாள் அவரை எத்தனை முறை பார்த்தார், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு எப்போது விலக்கிக் கொள்ளப்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட கேள்விகள் வீர பெருமாளிடம் கேட்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT