Published : 26 Sep 2014 10:32 AM
Last Updated : 26 Sep 2014 10:32 AM

சீனப் பட்டாசு இறக்குமதி: சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தெற்கு ஆனைக்குட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: சீனாவில் குளோரேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனர். குளோரேட் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. குளோரேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகள் பெரும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் இந்தியாவில் சீனப் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2010-ல் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.

இந்நிலையில் கடந்த 2014 மே 14-ம் தேதி சிவகாசியில் கணேஷ்பாபு என்பவரது குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இருந்தும் சீனப் பட்டாசுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

சீனப்பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு, வட மாநிலங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைமுகங்களிலும் சோதனை நடத்தி, சீனப் பட்டாசுகளைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும். சீன பட்டாசு இறக்குமதி குறித்து சிபிஜ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட் டிருந்தது.

இந்த மனு கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தபோது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு மீது நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பின் விபரம்:

சிவகாசியில் சீனப் பட்டாசு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப் படுகிறது. வெடிபொருள் கட்டுப் பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனப் பட்டாசுகளைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சீனப் பட்டாசு இறக்குமதியைத் தடுப்பது குறித்து மத்திய அரசு 2010 மார்ச் 5-ல் அனுப்பிய சுற்றறிக்கையை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x