Published : 15 Mar 2018 08:01 AM
Last Updated : 15 Mar 2018 08:01 AM

குமரியில் இருந்து கடலுக்குச் சென்ற படகுகள் அனைத்தும் கரை திரும்பின: கொச்சியில் இருந்து சென்ற 275 பேர் குறித்து தகவல் இல்லை

குமரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கரை திரும்பியுள்ளனர். அதே நேரம், கொச்சியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் 275-க்கும் மேற்பட்டோர் கரைதிரும்பவில்லை.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒக்கி புயலுக்கு பின்பு குமரி கடலோர கிராமங்களில் அசாதாரண நிலை ஏற்பட்டதால், கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தேங்காய்பட்டிணத்தில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கேரளம், லட்சத்தீவு, கர்நாடகா மற்றும் கோவா கடல் பகுதியில் கரை ஒதுங்கினர். நேற்று முன்தினம் வரை மாயமாகியிருந்த 24 விசைப்படகுகளையும், இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு, லட்சத்தீவுக்கு நேற்று கொண்டு சென்றனர். குமரி மாவட்ட மீன்பிடி தளங்களில் இருந்து சென்ற மீனவர்கள் அனைவரும் கரைதிரும்பிவிட்டனர். எனினும், கொச்சியில் இருந்து 25 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 275-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்த தகவல் கிடைக்காததால், தொடர்ந்து மீன்பிடி பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தகவல் தெரிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

12 பேர் தவிப்பு

மேலும், கொச்சியில் இருந்து 12 பேருடன் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டம், குறும்பனையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் படகு, கர்நாடக மாநிலம் முடீஸ்வரம் கடல் பகுதியில் நேற்று பழுதாகி தவித்து வருகிறது. இதுகுறித்து, தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சிலுக்கு, மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். படகு பழுதாகி நடுக்கடலில் நிற்கும் படத்தையும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இப்படகை மீட்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயிடம், சர்ச்சில் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x