Published : 02 Mar 2018 09:47 AM
Last Updated : 02 Mar 2018 09:47 AM

திண்டுக்கல், தேனி உட்பட 5 மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வு: முதல் நாளிலேயே 977 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல், தேனி உட்பட 5 மாவட்டங்களில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் முதல் நாளிலேயே 977 பேர் ஆப்சென்ட் ஆயினர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கின. தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11,809 மாணவர்கள், 10,325 மாணவிகள் என மொத்தம் 22,004 பேர் தேர்வு எழுதினர்.இவர்களில் 130 பேர் தேர்வு எழுதவில்லை. வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.

தேனி தேனி மாவட்டத்தில் 15,344 பேர் தேர்வு எழுதினர். தேனி மேரி மாதா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி, சின்னமனூர் கணக்கு வேலாயுதம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறுவதை ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டார். .

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 58 தேர்வு மையங்களில் 139 பள்ளிகளைச் சேர்ந்த 7,351 மாணவர்கள், 8,439 மாணவிகள், தனித் தேர்வர்களாக 284 மாணவர்கள், 211 மாணவிகள் என மொத்தம் 16,285 பேர் தேர்வு எழுதினர்.

மேலும் மாவட்டத்தில் பார்வையற்றோர், பார்வை குறைவு, மூளை முடக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 11 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்கு 11 (ஸ்கிரைப்) ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வினாக்களை ஆசிரியர் படித்ததும், பதிலை மாணவர் கூறியதை அப்படியே ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினர்.

அதேபோல் வேகமாக எழுத முடியாதோர், இரு கைகள் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 12 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதல் தேர்விலேயே 145 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆயினர்.

சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத 7045 மாணவர்கள், 8968 மாணவியர் உட்பட மொத்தம் 16,013 பேர் விண்ணப்பித்தனர். சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் நேற்று 60 தேர்வு மையங்களில் 15,917 பேர் தேர்வு எழுதினர். 96 பேர் தேர்வு எழுதவில்லை. தனித்தேர்வு எழுத 177 பேர் விண்ணப்பித்ததில் 144 பேர் தேர்வு எழுதினர். இதில் 33 தேர்வு எழுத வரவில்லை.

சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இடையமேலுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.லதா ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு சகிதா உடனிருந்தார்.

விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் 84 மையங்களில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களில் 10,845 மாணவர்களும், 13,390 மாணவிகளும் ஆக மொத்தம் 24,235 பேரும், தனித் தேர்வர்களாக 270 மாணவர்களும், 221 மாணவிகளும் ஆக மொத்தம் 491 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் மொத்தம் 410 பேர் தேர்வு எழுதவில்லை. விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறுவதை ஆட்சியர் அ.சிவஞானம் பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x