Published : 03 Mar 2018 06:08 PM
Last Updated : 03 Mar 2018 06:08 PM

காவிரி விவகாரத்தில் தமிழகத்தை அவமதிக்கிறார் மோடி: முத்தரசன் குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணித்து காயப்படுத்தி, அவமதிப்பதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில் நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளித்த தண்ணீரின் அளவில் 14.75 டிஎம்சி தண்ணீரை குறைக்கப்பட்டிருப்பது, சீராய்வு மேல்முறையீட்டு வாய்ப்பை மறுத்திருப்பது போன்ற பாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதேசமயம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால், கர்நாடக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவர்களும், அமைப்புகளும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்கமுடியாது என பகிரங்கமாக அறிவித்து, உச்ச நீதிமன்ற உத்தரவை நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூட்டத்தில் நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், மேலாண்மை வாரியம் அமைக்கவும் வலியுறுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் குரலைக் கேட்க விருப்பம் இன்றி, வேண்டுமானால் நீர்வளத்துறை அமைச்சரை சந்தியுங்கள் என கூறி அலட்சியப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமரின் நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணித்து காயப்படுத்தி, அவமதிப்பதாகும்.

மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் மக்கள் கோரிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கடமைப் பொறுப்புள்ள பிரதமர், அவரது பொறுப்புக்கு ஏற்ற முறையில் நடந்து கொள்ளாதது தமிழகத்தை அவமதிக்கும், ஆணவப் போக்காகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக் காட்டுகிறது.

மாநில அரசின் உரிமைகளை தொடர்ந்து பறித்துவரும் மத்திய அரசின் ஏதேச்சதிகாரப் போக்கை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டமன்றத்தை கூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றுபட்டு மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x