Published : 21 Mar 2018 06:39 PM
Last Updated : 21 Mar 2018 06:39 PM
தேனி மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் ரகு, கணேஷ் இருவரும் இன்று மாலை சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
துறை ரீதியான பிரச்சினைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனுவாக அளிப்பது காவலர்கள் வழக்கம். அதே போல் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் இருவரும் தங்களது பிரச்சினைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் தங்கள் பிரச்சினைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
ரகுவும், கணேஷும் ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாதிய ரீதியாக தங்களை ஒதுக்கி வைப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே ஒழுங்காக பணியாற்றிக்கொண்டிருந்த தங்களை திடீரென ராமநாதபுரத்திற்கு மாற்றியதாக தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினையில் கணேஷுக்கு இடமாற்றம் காரணமாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் தடைப்பட்டு போனது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இது குறித்து மேலதிகாரிகளிடம் முறையிட்டும் எதுவும் நிகழாததால் இன்று டிஜிபி அலுவலகம் வந்து மனு அளித்ததாக தெரிவித்தார்.
பின்னர் கணேஷும், ரகுவும் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தலையில் ஊற்றிக்கொண்டனர். இதைப்பார்த்து அங்குள்ள காவலர்கள் திடுக்கிட்டு அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். மிகுந்த சிரமத்திற்கிடையே மல்லுக்கட்டிய காவலர்கள், அவர்கள் இருவர் மீதும் தண்ணீர் கேனை கொண்டுவந்து அவர்கள் மீது ஊற்றினர்.
பின்னர் அவர்கள் இருவரையும் உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். ராதாகிருஷ்ணன் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே போலீஸார் தங்களுக்குள் மல்லுக்கட்டி கட்டிப் புரளுவதை பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி பதற்றதுடன் வேடிக்கை பார்த்தனர்.
காவலர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொள்வது குறித்த பிரச்சினை உயர் நீதிமன்றம் வரை எதிரொலித்து நாளை அது சம்பந்தமாக விசாரணைக்கு வரும் நிலையில் இன்றும் சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்னரே இதுபோன்ற சம்பவம் நடப்பது போலீஸாரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT