Published : 13 Mar 2018 10:11 AM
Last Updated : 13 Mar 2018 10:11 AM
காட்டுத் தீயில் சிக்கி மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனை மற்றும் 3 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.
பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குரங்கணி மலையில் 39 பேர் மலையேறும் பயிற்சிக்காக சென்றுள்ளனர். இதில் 3 பேர் ஏற முடியாமல் திரும்பி உள்ளனர். 36 பேர் இரு குழுக்களாகப் பிரிந்து மலையேறி உள்ளனர். இறங்கும்போது, காட்டுத் தீ பரவியதால் தீயில் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் லேசான காயமடைந்து, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் அனுமதி இன்றி சென்றுள்ளனர். மலையேறும் பயிற்சிக்கு செல்ல வேண்டும் எனில் வனத்துறை அனுமதியை பெற்றுத்தான் போக வேண்டும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் அனுமதியில்லை.
வறட்சியால் தண்ணீருக்கென வன விலங்குகள் வரும்போது, உயிருக்கு ஆபத்து இருக்கும். மலைப்பகுதியில் இலை, தழைகள் காய்ந்து தீப்பற்றும் சூழல் உள்ளது. இதனால் மலையேறும் பயிற்சிக்கு அனுமதி இல்லை.
இனிமேல் கோடையில் மலையேறும் பயிற்சிக்கு அனுமதி கடுமையாக்கப்படும்.
அவர்கள் அனுமதியுடன் சென்றிருந்தால் தக்க பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்காது. தற்போது என்ன நடந்தது என்பது குறித்து காயமடைந்தவர்களிடம் சரியாக விசாரிக்க முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
துணை முதல்வர் கூறும்போது, “குரங்கணியில் இருந்து இரு வழியில் மலையேறும் பயிற்சிக்கு செல்லலாம். ஒன்று வனத் துறையால் அனுமதிக்கப்படும்.
மற்றொன்று அனுமதி இல்லை. குரங்கணி டாப் ஸ்டேஷனுக்கு அனுமதி உள்ளது. அனுமதி இல்லாத குரங்கணி கொழுக்கு மலை வழியில் அவர்கள் சென்றுள்ளனர். அனுமதியின்றி சென்று திரும்பியபோது தீயில் சிக்கியுள்ளனர்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT