Published : 19 Mar 2018 03:13 PM
Last Updated : 19 Mar 2018 03:13 PM
சிஎம்டிஏ எல்லையை விரிவுபடுத்துவது தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1189 சதுர கி.மீ பரப்பு கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லையை, 8878 சதுர கி.மீ என விரிவுப்படுத்தி கடந்த ஜனவரி 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்ரமணியன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, புதிய அரசாணைப்படி திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும்; எல்லைகளை விரிவுபடுத்துவது பற்றி பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து அரசின் நிலைப்பாட்ட்டை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எல்லை விரிவாக்கம் தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ. ஆகியவை விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT