Published : 28 Sep 2014 08:58 AM
Last Updated : 28 Sep 2014 08:58 AM

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கருணாநிதி அவசர கடிதம்

ஜெயலலிதா வழக்கில் வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கருணாநிதி நேற்று அனுப்பிய அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் உருவாகியிருக்கும் நிலையைப் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். இங்கு ஆளும்கட்சியினர் வன்முறையை கட்டவிழுத்துள்ளனர். திமுக கட்சி அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகள் மீது தொடர் தாக்குதலை அதிமுகவினர் தடையின்றி நடத்தி வருகின்றனர்.

பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டையும் தாக்கி யுள்ளனர். பொதுமக்களின் உடைமைகளையும் சேதப்படுத்தி யுள்ளனர். ஊடகங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இவற்றை போலீஸார் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். தற்போது நடந்து வரும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தொடர அனுமதிக்கப்பட்டால், பல சீரழிவுகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே, தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உடனடியாக தாங்கள் தலையிட்டு சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையாளர்களுக்கு துணை போகும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x