Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM

8 ஆண்டுகளுக்கு பின்னர் ஓசூர் சந்தையில் முட்டைகோஸ் விலை உயர்வு

ஓசூர் பகுதியில் நடப்பாண்டு கோடையில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், முட்டைகோஸ் உற்பத்தி குறைந்து விலை உயர்ந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஓசூர் ஒன்றியத்தில் உள்ள ஆவலப்பள்ளி, பேரிகை, பாகலூர், பெலத்தூர், மத்தம் அக்ரஹாரம், தளி, கெலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலி பிளவர், பீட்ரூட், உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டில் பருவமழை குறைவு காரணமாக நிலத்தடி நீர் மட்டத்தில் சரிவு ஏற்பட்டு இப்பகுதியில் சொட்டுநீர் பாசன பரப்பளவு பாதியாக குறைந்து விட்டது.

தண்ணீர் பற்றாக்குறையால் முட்டைகோஸ் பயிரிடும் பரப்பளவு வழக்கத்தை விட பாதியாக குறைந்துள்ளதால் முட்டைகோஸ் உற்பத்தியில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓசூர் காய்கறி சந்தைக்கு முட்டைகோஸ் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் முட்டைகோஸ் ஒரு மூட்டை (98கிலோ)ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுவதால் முட்டைகோஸ் பயிரிட் டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தை வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது: முட்டைகோஸ் விலை இந்த வருட கோடை காலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு மூட்டை ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையான முட்டைகோஸ், தற்போது ஒரு மூட்டை ரூ.1200 வரை விற்கப்படுகிறது. முட்டை கோஸ் பயிர், 3 மாதங்களில் அறுவடைக்கு வருகிறது. ஒரு ஏக்கரில் சுமார் 350 முதல் 400 மூட்டைகள் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு உரம் உள்ளிட்ட செலவுகள் போக ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இங்கு விளையும் முட்டைகோஸ், சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக ஓசூர் முட்டைகோசுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையில் நிலத்தடி நீருள்ள இடங்களில் சொட்டுநீர் பாசன வசதி மூலமாக முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு கிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து ஓசூர் உழவர் சந்தை உதவி வேளாண் அலுவலர் தமிழ்வேந்தன் கூறுகையில், ‘‘ஓசூர் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் முட்டைகோஸ் பயிரிடும் பரப்பளவு பாதியாக குறைந்துள்ளது. உழவர் சந்தைக்கு வழக்கமாக 5 டன் முதல் 6 டன் வரை முட்டைகோஸ் வரத்து உள்ள இடத்தில் தற்போது 3 டன்னாக வரத்து குறைந்துள்ளது. இதனால், முட்டைகோஸ் விலை உயர்ந்துள்ளது.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x