Published : 03 May 2019 02:55 PM
Last Updated : 03 May 2019 02:55 PM

வில்லிவாக்கத்தில் கொடூரம்: மதுபோதையில் தறிகெட்டு காரை ஓட்டி பொதுமக்கள் மீது மோதல்- 2 பேர் பலி, பெண் படுகாயம்

வில்லிவாக்கம் மேம்பாலத்தின் கீழ் இன்று காலை மதுபோதையில் இன்னோவா காரை வேகமாக ஓட்டி 3 பேர்மீது கொடூரமாக மோதிய நபரால் 2 பேர் கொல்லப்பட்டனர். பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை வில்லிவாக்கம் அன்னை  சத்தியா நகர் பாடி மேம்பாலத்தின்கீழ் இன்று காலை இன்னோவா கார் ஒன்று தறிகெட்டு வேகமாக வந்தது. சாதாரணமாக கார் வருகிறது என நினைத்து சாலையில் நடந்துச் சென்ற பொதுமக்கள் மீது வேகமாக மோதியது.

பின்னர் சிறிய தெருவுக்குள் கார் வேகமாக நுழைந்தது. அப்போது தெருமுனையில் நின்ற நபர்மீது கார் வேகமாக மோதியது. அப்போது தெருவின் மத்தியில் தள்ளாடியப்படி சென்றுக்கொண்டிருந்த மூதாட்டி சரசா (65) என்பவர் 100 அடி தூரத்தில் கார் வேகமாக வருவதைப்பார்த்து தம் மீது மோதாமல் இருக்க கையெடுத்து கும்பிட்டு நின்றுள்ளார்.

அவரால் தப்பித்து ஓடவும் முடியவில்லை, ஆனால் காரை ஓட்டிவந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மூதாட்டிமீது நேருக்கு நேர் மோதியுள்ளார். இதில் கார் அவர்மீது ஏற சரசா அப்படியே காருக்கடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். சம்பவ இடத்திலேயே பலியானார்.

கார் தறிக்கெட்டு ஓடுவதும் பலரையும் இடித்து தள்ளுவதையும் பார்த்த பொதுமக்கள் காரை விரட்டிச் சென்றனர். கார் ஒருகட்டத்தில் வேகமாக சென்று டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றுவிட்டது. உடனடியாக காருக்குள் இருந்த 2 பேர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

காரை ஓட்டி வந்த தேவேந்திரன் என்கிற நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். ஓட்டுநர் தேவேந்திரன் மதுபோதையில் தறிகெட்டு காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

தறிகெட்டு ஓடிய கார்  சரசா (65), ஆதிலட்சுமி (50) , மோகன் (40) ஆகியோர் மீது மோதியது.  கார் வேகமாக மோதியதில் சரசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆதிலட்சுமி மற்றும் மோகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஆதிலட்சுமி தூக்கி வீசப்பட்டு கால் முறிந்தது. மோகன் என்பவருக்கு பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடினார். சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மோகனை சேர்த்தனர் ஆனால் மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையின் பிரதான பகுதியில் மதுபோதையில் காரை தறிகெட்டு ஓட்டி 3 பேர் மீது மோதி 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பார்ப்போரை பதைபதைக்கச் செய்யும் விதத்தில் தெருவுக்குள் வேகமாக வரும்கார் மூதாட்டி மீது மோதும் காட்சி கொடூரமாக உள்ளது.

காலையில் நடந்த இந்த சம்பவம் காரணமாக  வில்லிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x