Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM

குண்டுவெடிப்புகள் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பினர் விரைவில் இலங்கை பயணம்

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகளில் இணைந்து கொள்வதற்காக மத்திய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினர் விரைவில் அந்நாட்டுக்குச் செல்கின்றனர்.

இலங்கையில் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் எச்சரித்தனர். ஆனால் இலங்கை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறினர். இதனால் இலங்கையில் ஏப்.21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் ஏப்.24-ம் தேதி முதல் அவசரச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை காவல் துறைக்கு மட்டுமே இருந்த பல அதிகாரங்கள் தற்போது முப்படையினர் வசமாகி உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முப்படைகளின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தொடர் சோதனை நடத்தப்படுகிறது. அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை நீதிமன்றம்கூட பிணை வழங்க முடியாது.

இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழகத்தில் தங்கி இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் சந்தேகித்தனர். அவர்கள் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவியது.

இதையடுத்து சென்னை, கோவை, ராமநாதபுரம், அதிராமபட்டினம், ராமேசுவரம், தஞ்சாவூர், கும்பகோணம், நெல்லை உட்படதமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் ரியாஸ் அபுபக்கர், அபு துஜானா என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணைகள், தகவல்கள் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்துகொள்ள இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கை அரசின் விசாரணைகளில் இணைந்து கொள்வதற்காக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. வைசி மோடி என்ற அதிகாரி தலைமையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விரைவில் இலங்கை செல்ல உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x