Published : 13 May 2019 04:16 PM
Last Updated : 13 May 2019 04:16 PM

மதுபோதை உயிரைப் பறித்தது: சாந்தோமில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்

மதுபோதையில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வேகமாகச் சென்று மரத்தில் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.

மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (22). இவர் திருவான்மியூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார். அதே நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (23). இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட், பாஸ்போர்ட் புக் செய்பவராகப் பணியாற்றி வந்தார்.

இவர்களது நண்பர்கள் பாரதிராஜா தனியார் சிட்பண்ட் கம்பெனியிலும், முத்து வேன் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இரவு இவர்கள் 4 பேரும் பஜார் சாலை அருகே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இரவு 11.30 மணி அளவில் நொச்சிக்குப்பம் செல்ல, பாபநாசம் சிவன் சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வேகமாக வந்துள்ளனர்.

மதுபோதையில் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றதால், நிலை தடுமாறி அபார்ட்மென்ட் கேட்டிற்கும் அதன் முன்பு இருந்த மரத்திற்கும் இடையில் உள்ள குறுகிய இடத்திற்குள் மோட்டார் சைக்கிள் புகுந்ததில் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ், விஷ்ணு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் காயம்பட்டு கிடப்பவர்களைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்ற இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் விஷ்ணு, வெங்கடேஷ்  உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.         

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x