மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதி

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதி
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா நேற்று மாலை 5.15 மணி அளவில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச் சாலையில் உள்ள பெண் கைதிகள் தங்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர்கள், சிறை அதிகாரி களைச் சந்தித்து ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய், இதய கோளாறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.

அதனை நிராகரித்த சிறை அதிகாரிகள், தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க முடியாது, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை அல்லது டாக்டர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யலாம் என்று தெரிவித்தனர்.

சிறை அதிகாரிகளின் கருத்தை ஏற்க மறுத்த அதிமுக வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, எனவே தனியார் மருத்துவ மனையில்தான் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து நாராயண இருதாலயா மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்தனர். ஆனால், அந்த மருத்துவமனையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள மதானி உள்ளதால் பாது காப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதி வேறு மருத்துவ மனையில் சேர்ப்பது குறித்து பரிசீலித்தனர். இறுதியில் ஜெய தேவா மருத்துவமனையில் நேற்றிரவு 9 மணிக்கு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர்கள் பிடிவாதம்

தீர்ப்பு வெளியாகி சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச் சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளி யேற மறுத்து அங்கேயே இருந்தனர்.

போலீஸார் வெளியேற அறிவுறுத்தியபோது, ‘எங்களையும் அம்மா இருக்கும் சிறையில் அடையுங்கள். நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in