Published : 09 May 2019 01:14 PM
Last Updated : 09 May 2019 01:14 PM

ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தகுதித்தேர்வு அறிமுகப்படுத்திய ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் மூன்று முறைதான் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும்தான் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தனி நீதிபதி தேசிய தகுதித்தேர்வை அடிப்படையாக  எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அது தவறான கருத்து என்றும் தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதித்தேர்வை எழுத முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகியுள்ளதாகவும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர்.

தனி நீதிபதி முன்பு தாங்கள் மனுதாரர் இல்லை என்பதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை, பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியபிரசாத் அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகவும், அடுத்த வாரம் விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x