Published : 31 May 2019 09:01 PM
Last Updated : 31 May 2019 09:01 PM

மருத்துவக் கல்லூரி மாணவியிடம் தோஷம் கழிப்பதாக நூதன முறையில் 10 சவரன் செயின் பறிப்பு: மோசடி நபர் கைது

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவியிடம் தோஷம் கழிப்பதாக அழைத்துச் சென்று, கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்து 10 சவரன் செயினை பறித்துச் சென்ற மோசடி நபர் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி, தாம்பரத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு சித்த மருத்துவம் பயின்று வருகிறார்.

கடந்த 15-ம் தேதி சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டு  மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினார். அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்த ஒரு நபர் அந்த மாணவியின் தந்தை பெயரைக் கூறி  அவருடைய பெண் தானேம்மா நீ எனக் கேட்டுள்ளார்.

நெற்றியில் குங்குமம், பட்டையுடன் தெய்வீகத் தோற்றத்தில் காட்சியளித்த அவரை நீங்கள் யார் என கேட்டுள்ளார். உன் தந்தையும் நானும் பால்ய சிநேகிதர்கள் எனக்கூறியவர் தாம் பலருக்கும் தோஷ பரிகாரம் செய்வதாக கூறியுள்ளார்.

திடீரென, ''உனக்கும் சில பிரச்சினைகள் உள்ளன. படிப்பில் சிறப்பாக வெல்ல அது தடையாக உள்ளது. நண்பனின் மகள் என்பதால் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா போக முடியாது. அருகில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ஒரு சின்ன பரிகார பூஜை செய்கிறேன். நீ வாம்மா. அப்புறம் பார் நீ எப்படி ஜொலிப்பாய்'' என்று கூறியுள்ளார்.

தந்தையின் நண்பர்தானே என நம்பி, அவருடன் சென்றுள்ளார் மாணவி. தாம்பரம் சானிடோரியம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அழைத்துச் சென்ற அவர் மாணவியை ஓரிடத்தில் அமர வைத்துள்ளார்.

பூஜையின்போது, ’’நகை அணியக்கூடாது. கொடு, பேப்பரில் மடித்து தருகிறேன். பூஜை முடிந்தவுடன் போட்டுக்கொள்’’ என மாணவி அணிந்திருந்த 10 சவரன் செயினை வாங்கி பேப்பரில் மடித்து தானே வைத்துக்கொண்டுள்ளார்.

பின்னர், ‘’இங்கேயே இரும்மா, சூடம், தேங்காய் பூஜைப்பொருட்களை வாங்கிக்கொண்டு வருகிறேன்’’ என கூறிவிட்டு மாயமானார். அவர் வருவார் வருவார் என எதிர்பார்த்த மாணவி அருகில் உள்ளவர்களை விசாரித்தபோது அப்படி ஒரு தோஷம் கழிக்கும் ஆள் யாரும் இங்கு இல்லை என்று கூறியுள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மாணவி தாம்பரம் போலீஸில் புகார் அளிக்க, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த போலீஸார் மோசடியில் ஈடுபட்டு 10 சவரன் செயினுடன் மாயமான நபர் பல மோசடி வழக்குகளில் சிக்கி கைதான சுரேஷ் குமார் என்பதை அறிந்து அவரைப் பிடித்தனர்.

ஆம்பூரைச் சேர்ந்த சுரேஷ் குமார்  இதேபோன்று கவனத்தை திசை திருப்பி திருடுவதில் வல்லவர் என்றும், 8 மோசடி வழக்கில் சிக்கி, குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x