

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அப்போது, 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மே 18 (சனிக்கிழமை) வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் தொடரும்.
சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
அதேநேரத்தில் சேலம், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், ராசிபுரம், தருமபுரி, போச்சம்பள்ளி ஆகிய இடங்களில் மழை பெய்தது.
ஆரணி அருகே இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், நெடுஞ்சாலையில் புளியமரம் விழுந்ததில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.