Last Updated : 11 May, 2019 03:09 PM

 

Published : 11 May 2019 03:09 PM
Last Updated : 11 May 2019 03:09 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம்; முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தால் அதற்கு நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விழுப்புரம் பகுதியிலும் மற்றும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்மந்தமாக மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் திருநள்ளார் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப் போவதாக மத்திய அரசில் இருந்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமாக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவருக்கு பதில் அனுப்பியது மட்டுமின்றி, இது சம்மந்தமாக புதுச்சேரி சட்டப்பேரவையிலும் விளக்கமாக நான் பதில் அளித்தேன்.

புதுச்சேரி அரசு, மத்திய அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் கொடுக்காது என்று கூறினேன். இப்போது புதுச்சேரியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வமான கடிதம் எங்களுக்கு எதுவும் வரவில்லை.

அப்படி இருந்தாலும் கூட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நிலையிலேயே தான் நாங்கள் இருக்கிறோம். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. புதுச்சேரியில் மக்களுக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவர முயற்சி செய்தால் அதற்கு நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம். மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் வந்தால் அதனை திருப்பி அனுப்பி, இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று நான் பதிலளிப்பேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x