Published : 23 May 2019 06:57 PM
Last Updated : 23 May 2019 06:57 PM

இழப்பு யாருக்கு? காலம் பதில் சொல்லும் - கிண்டல் செய்தவரைச் சாடிய தமிழிசை

இழப்பு யாருக்கு என்பதைக் காலம் பதில் சொல்லும் என்று தூத்துக்குடி தொகுதி முடிவுகள் குறித்துக் கிண்டல் செய்தவருக்குத் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்தியளவில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட்டார். இதில் கனிமொழி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இதன்மூலம் தமிழிசை தோல்வியடைந்தது உறுதியாகியுள்ளது.

இதனைக் கிண்டல் செய்யும் விதமாகத் தமிழிசையின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு, “தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை தூத்துக்குடி உப்பு” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை, “உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும். உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, இதய நோய் வரும். உங்கள் குடும்ப டாக்டரைக் கேட்டால் உண்மை புரியும். இழப்பு யாருக்கு? காலம் பதில் சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x