Last Updated : 02 May, 2019 04:55 PM

 

Published : 02 May 2019 04:55 PM
Last Updated : 02 May 2019 04:55 PM

தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற அணி பிரதமரை தேர்வு செய்யும் - டி.கே. ரங்கராஜன்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது; மதச்சார்பற்ற அரசே ஆட்சியமைக்கும் என்று மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் தரும் மத்திய அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். மத்திய அரசு அளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதியை திரும்பபெறுவதற்கான காரணமாக கருத வேண்டியதில்லை.

அரசியல் சட்டத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கிரண்பேடியே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தீர்ப்பினை ஒட்டி புதுச்சேரியில் உள்ள மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தை அரசே ரத்து செய்ய வேண்டும்.

நிர்வாகத்தின் கோளாறினால் பாஜக குறைந்த அளவு தான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். கடந்த முறை பெற்ற 31 சதவீத வாக்குகளை விட இம்முறை குறையும். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியும் 160 இடங்களுக்குள் தான் பாஜக வெல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது. மதச்சார்பற்ற அரசே ஆட்சியமைக்கும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வார்கள். கடந்த முறையை விட இம்முறை சிபிஎம் கூடுதல் இடங்களை வெல்லும் என்ற நம்பிக்கையுள்ளது.

ராகுல் போட்டியால் கேரளத்தில் சிபிஎம்முக்கு பாதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர் விவகாரத்தில் சபாநாயகர் என்பவர் பேரவைக்குள் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் உரிமை உள்ளது. சபைக்கு வெளியே இல்லை. சபைக்கு வெளியே நடைபெறும் நிகழ்வுக்கு கட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இதில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால் அது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.

பேட்டியின்போது பிரதேச செயலர் ராஜாங்கம், நிர்வாகிகள் பெருமாள், ராமச்சந்திரன், ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x