Published : 19 Sep 2014 10:46 AM
Last Updated : 19 Sep 2014 10:46 AM
தருமபுரி அடுத்த வத்தல்மலைக்கு அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.
தருமபுரி அருகேயுள்ள மலை கிராமம் வத்தல்மலை. இங்கு 7-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு இதுவரை பேருந்து போக்குவரத்து வசதி இல்லை. எனவே, சரக்கு வாகனங் களிலும், கார், வேன் போன்ற வாகனங்களிலும் தான் மலைகிராம மக்கள் தருமபுரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாகனங் களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வது தெரிய வந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவுப்படி தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார் தலைமை யிலான குழுவினர் வத்தல்மலை அடிவாரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக அளவு ஆட்களை ஏற்றி வந்த 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிச் செல்வது, அதிகப் படியாக பயணிகளை ஏற்றிச் செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 15-ம் தேதி முதல் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருவோர் தலைக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் இன்றி வட்டார போக்குவரத்து அலுவலக பணியாக யார் வந்தாலும் அவர்களின் பணிகள் முடித்துத் தரப்பட மாட்டாது என்றும், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT