Published : 23 May 2019 05:30 PM
Last Updated : 23 May 2019 05:30 PM

மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும்: ராமதாஸ் வாழ்த்து

வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இரண்டாவது முறையாக மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (மே 23) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே தேசிய அளவில் பாஜக முன்னிலை வகித்தது. மாலை நிலவரப்படி பாஜக கூட்டணி 340 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், பாஜகவின் வெற்றிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வரும் 26 ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு பாமக சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற போது, இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும்  எப்போதும் இருப்பேன் என்று உறுதியளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு  மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x