Last Updated : 13 May, 2019 12:00 AM

 

Published : 13 May 2019 12:00 AM
Last Updated : 13 May 2019 12:00 AM

விரைவு, வணிக தபால்களை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளால் அஞ்சல் துறைக்கு வருவாய் அதிகரிப்பு: 2018-19-ம் நிதியாண்டில் ரூ.162.04 கோடி வருவாய்

விரைவு தபால்கள் மற்றும் வணிக தபால்களை பிரபலப்படுத்த அஞ்சல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக, விரைவு தபால்கள் மற்றும் வணிக தபால்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. இதன்படி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு கடந்த 2018-19-ல் ரூ.162.04 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

அஞ்சல் துறை சார்பில், விரைவு தபால் சேவை கடந்த 1986-ம் ஆண்டும், வணிக தபால் சேவை கடந்த 1996-ம் ஆண்டும் தொடங்கப்பட்டன. தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விரைவு தபால்கள் மூலம் தங்களது கடிதங்களை அனுப்பலாம். வணிக தபால் சேவையை அரசு, பொதுத்துறை மற்றும் வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், விரைவு மற்றும் வணிக தபால் சேவைகளை மக்களிடையே பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, சென்னை நகரில் உள்ள முக்கிய தபால் நிலையங்களில் விளம்பரப் பலகைகள், மெட்ரோ ரயில்கள், பேருந்து நிறுத்த நிழற்கூரைகள் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாதம்தோறும் அதிகஎண்ணிக்கையிலான விரைவு தபால்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு ‘புக் நவ், பே லேட்டர்’ (தபால்களை முதலில் புக் செய்து அனுப்பி விட்டு அதற்கான கட்டணத்தை பிறகு செலுத்தும்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் அளவுக்கு வர்த்தகம் செய்வதாக உறுதியளிக்கும் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தாங்கள் அனுப்பும் தபால்களுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாறாக, அவர்கள் முதலில் தபால்களை புக் செய்து விட்டு, அதற்கான கட்டணத்தை பிறகு செலுத்தலாம். இதற்கு அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.

மேற்கண்ட திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்களும் தபால்களை அனுப்பலாம். ஆனால், அவர்கள் அதற்கு வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும். மேலும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதமும், ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பவர்களுக்கு 30 சதவீதமும் பில் கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. விரைவு தபால்களை அனுப்புவதற்கு வசதியாக 7 அஞ்சல் நிலையங்களில் இரவு 7 மணி வரையிலும், 12 அஞ்சல் நிலையங்களில் இரவு 8 மணி வரையிலும், 2 அஞ்சல் நிலையங்களில் இரவு 9 மணி வரையிலும், அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையத்தில் இரவு 10 மணி வரையிலும் கவுன்ட்டர்கள் செயல்படுகின்றன.

இதைத் தவிர, செயின்ட் தாமஸ் மவுன்ட், அண்ணாசாலை மற்றும் பூங்காநகர் தலைமை அஞ்சல் நிலையங்களில் தபால்களை அனுப்புவதற்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கவுன்ட்டர்கள் உள்ளன. மேலும், வணிக தபால்களை அனுப்புவதற்கு வசதியாக நந்தனம், பூங்காநகர், வடபழனி, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வணிக தபால் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சேவைகளை வழங்குவதால், விரைவு மற்றும் வணிக தபால்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது.

சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு கடந்த 2018-19-ம் ஆண்டில் ரூ.162.04 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46.75 சதவீதம் அதிகமாகும். வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை அஞ்சல் துறையின் விரைவு தபால்கள் மூலம் மட்டுமே அனுப்புகின்றன. இதன் காரணமாக, கடந்த 2017-18ம் ஆண்டில் புக் செய்யப்பட்ட 87 லட்சம் விரைவு தபால்களின் எண்ணிக்கை 2018-19-ம் ஆண்டில் 1.37 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், வருவாயும் ரூ.51.71 கோடியில் இருந்து ரூ.68.47 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், விரைவு தபால்களை அனுப்ப அஞ்சல்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ள வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை கடந்த 2017-18-ம் ஆண்டில் 74 ஆக இருந்தது. 2018-19ம் ஆண்டில் 88 ஆக அதிகரித்துள்ளது. வணிகதபால்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள், நிறுவனங்களுக்கே சென்று சேகரிக்கும் வசதியும் அஞ்சல்துறை வழங்குகிறது.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x