Published : 30 May 2019 11:31 AM
Last Updated : 30 May 2019 11:31 AM

மருத்துவக் காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது குறித்த நிலைப்பாடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்காக மொத்த கட்டணத்தில் 30 சதவீதம் மட்டுமே காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுவதால், இந்தத் தொகையை அதிகரித்து வழங்கக் கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டீக்காராமன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, முதல்வர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது, காப்பீட்டுத் தொகை மற்றும் சிகிச்சை பட்டியலில் அனுமதிக்கப்பட்ட நோய்கள் எவை, மருத்துவ செலவுக்கான உச்சவரம்பு ஏதும் உள்ளதா, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஏதும் அமைக்கப்பட்டுள்ளதா என்பன குறித்தும், காப்பீட்டுத் தொகைக்கான உச்சவரம்பை அதிகரிப்பது குறித்த நிலைப்பாட்டையும் தமிழக அரசு தெரிவிக்க உத்தரவிட்டார்.

மேலும், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்தெந்த நோய்கள் சேர்க்கப்பட வேண்டும், சிகிச்சைப் பட்டியலில் கூடுதல் நோய்களைச் சேர்ப்பதால் அரசுக்கு ஏற்படும் செலவினங்களை மதிப்பிட நிபுணர் குழு ஏதும் அமைக்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x