Published : 27 May 2019 11:44 AM
Last Updated : 27 May 2019 11:44 AM
தமிழக பாஜக தலைமை பதவியில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இல.கணேசன் அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:
"தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் முயற்சியில் ஏற்கெனவே பல ஆண்டுகள் ஈடுபட்டதால் தான், கிளை பகுதிகள், வாக்குச்சாவடிகளில் பாஜக பரவியிருக்கிறது. தமிழகத்தில் இந்த தேர்தல் முடிவு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து நாங்கள் இன்னும் ஆய்வு செய்யவில்லை. மத்தியில் பதவியேற்பு விழா முடிந்த பிறகு அநேகமாக அகில இந்திய தலைவர்கள் சென்னைக்கு வருவார்கள். அப்போது, தமிழகத்தில் தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆலோசிப்போம். அதற்கு முன்பு, இந்த முடிவுகள் குறித்து ஆத்ம சோதனை செய்யும் அவசியம் உள்ளது.
என்னுடைய மாநிலங்களவை எம்.பி.க்கான பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. பாஜகவில் பதவியை கேட்டுப்பெறுவது என்பதே கிடையாது. எல்லோரையும் அறிந்தவர்கள் தலைவர்கள். கேட்டுப்பெறும் சுபாவம் எனக்கு கிடையாது. பிரதமர் உட்பட எல்லோருக்கும் என்னை தெரியும். தலைவர் இட்ட கட்டளையை ஏற்றுக்கொள்வது தொண்டர்களின் கடமை.
தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரும் என்ற யூகங்களை நம்ப வேண்டாம். ஆனால், இந்தியா முழுவதும் ஒராண்டுக்கு முன்பாகவே தலைமை மாற்றப்பட்டிருக்க வேண்டும். அமைப்பு ரீதியான மாற்றம் வரும். அடுத்த செயற்குழுவில் கட்சித் தேர்தலுக்கான தீர்மானம் வரும்.
தமிழிசை செயல்பாடு குறித்து பொதுவாக பேசும் பழக்கம் இல்லை, அது நல்லதும் இல்லை"
இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT