Last Updated : 28 May, 2019 04:30 PM

 

Published : 28 May 2019 04:30 PM
Last Updated : 28 May 2019 04:30 PM

தாழையூத்து அருகே 9 வயது சிறுவன் படுகொலை: போலீஸார் விசாரணை

தாழையூத்து அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தளவாய். இவரது மகன் கொம்பையா (9). கடந்த 26-ம் தேதி மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் கொம்பையா, நீண்ட நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

இதனால், சிறுவனை அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். ஆனால், கொம்பையாவைக் கண்டுபிடிக்க முடியாததால், தாழையூத்து காவல் நிலையத்தில் தளவாய் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் குறிச்சிகுளம் அருகே நான்குவழிச் சாலை ஓரத்தில் முள் புதரில் தலையில் காயங்களுடன் சிறுவன் கொம்பையா சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் கொம்பையா, தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலையாளி யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x