Last Updated : 20 May, 2019 12:00 AM

 

Published : 20 May 2019 12:00 AM
Last Updated : 20 May 2019 12:00 AM

திண்டிவனத்தில் பேருந்து நிலையம் இல்லாமல் பயணிகள் பரிதவிப்பு

சென்னையிலிருந்து 125 கி.மீ தொலைவில் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்த டத்தில் உள்ளது திண்டிவனம்.

இந்த நகராட்சி வழியாக தினசரி 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குவதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பயணிகள் திண்டிவனத்தை கடந்து செல்கின்றனர். இதுதவிர புதுச்சேரி, விழுப்புரம், திருவண் ணாமலை, திருத்தணி, திருப்பதி, பெங்களூர், வேலூர், ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட நகரங்களின் இணைப்பு முனையமாகவும் திண்டிவனம் விளங்குவதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக திண்டிவனத்தில் இருப்பது பாழடைந்த பேருந்து நிலையம் மட்டுமே.

கடந்த 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி பேருந்து நிலையம், திண்டி வனம் ரயில்வே லைன் அருகில் திறந்து வைக்கப்பட்டது. சென்னை சாலைக்கும், இந்த பேருந்து நிலையத்துக்கும் இடையே ரயில்வே லைன் உள்ளதால், சென்னை மார்க்கமாகவும், தென் மாவட்டங்கள் மார்க்கமாகவும் செல்லும் பேருந்துகள், இந்திரா காந்தி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துவது கிடையாது. ஆனால் செஞ்சி, திருவண்ணா மலை, சாத்தனூர்அணை, மேல்மலை யனூர், ஆரணி, வந்தவாசி, வேலூர், சேத்பட்டு, காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, பெங்களூரு, மயிலம் வழியாக புதுச்சேரி, விழுப்புரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

50 ஆண்டுகளை நெருங்கி யுள்ள இந்த பேருந்து நிலையம் பலவீனமடைந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன் அதனை மூடிய நகராட்சி நிர்வாகம், பேருந்து நிலையத்தில் மற்றொரு பகுதியில் அமரும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற தற்காலிகமாக நிழற்குடையை அமைத்துள்ளது. இதனால் பயணிகள் குடிநீருக்கு மட்டுமின்றி கழிப்பறைக்கும் திண்டாடி வருகின்றனர். இரவு 7 மணிக்கு மேல் மதுப்பிரியர்கள் மற்றும் முகம் சுளிக்க வைக்கும் இதர செயல்களாலும் பெண் பயணிகள் இங்கு வரவே முடியாத அவலம் நிலவுகிறது.

இது ஒருபுறமிருக்க, திண்டி வனத்தைக் கடந்து செல்லும் பேருந்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நகராட்சி நிர்வாகம், பயணிகள் வசதிக்காக எந்த வசதியும் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பேருந்து நிலைய வணிகரான முனுசாமி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பேருந்துகள் அதிகரிப்பால் பேருந்துகள், நிலையத்துக்குள் வருவதில்லை. மேம்பாலத்தின் அருகிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால், பேருந்து மாறி செல்லும் பயணிகள் ரயில்வே லைனை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் நகருக்கு புதிய பேருந்து நிலையம் கட்டாயம் தேவை என்றார்.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் கடந்த 1997 முதல் மாற்று பேருந்து நிலையத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டாலும் இதுவரை புதிய பேருந்து நிலையத் திற்கான பூர்வாங்கப் பணிகள் துவக்கப்படாமல் அதுகுறித்த கோப் புகள், தலைமைச் செயலகத்தில் தேக்க நிலையில் உள்ளது.

அண்மையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நகராட்சிகளில் பேருந்து நிலையம் அமைக்க ரூ.736 கோடி தேவை என கோரியுள்ளார். அதன்படி திண்டிவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ.15.62 கோடி தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக திண்டிவனம் நகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்டபோது, திண்டிவனம் புறவழிச்சாலை பிரியும் பகுதியில் ஆர்யாஸ் ஓட்டல் அருகே 100 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கோப்பு மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்து நிதி ஒதுக்கிய பின்னர் பணிகள் துவக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x