Published : 11 May 2019 07:15 PM
Last Updated : 11 May 2019 07:15 PM

சின்மயி புதிய போராட்டம்; ட்விட்டரில் அழைப்பு:ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை போலீஸ் அனுமதி மறுத்ததால் முடிவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பெண் அளித்த பாலியல் புகார் மீதான வழக்கு விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த சின்மயிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சின்மயி வேறுவகையான போராட்டத்தை நடத்த அழைப்பு விட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்தார்

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

முன்னாள் பெண் ஊழியர்  அளித்த புகாரை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக் குழு முன் ஆஜராகி வந்த அந்தப் பெண் ஊழியர் தன்னுடன் வழக்கறிஞர் ஒருவரையும் அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதற்கு நீதிபதி பாப்டே தலைமையிலான குழு அனுமதி மறுத்தது. இதனால், விசாரணைக் குழுவில் இருந்து அந்தப் பெண் ஊழியர் திடீரென விலகினார். இந்நிலையில் நீதிபதி பாப்டே தலைமையிலான நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி கொண்ட அமர்வு பெண் ஊழியர் அளித்த புகாரை ஆய்வு செய்தது. புகாரில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக்கூறி புகாரை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து பாடகி சின்மயி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே.12) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு நீதித்துறை மாண்பு எனக்காரணம் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவமதிப்பாகும், சட்டம் ஒழுங்குப்பிரச்சினை ஏற்படும் என காவல்துறை நிராகரித்துவிட்டது.

போலீஸ் அனுப்பிய பதில் கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு அடுத்தடுத்த பதிவுகள் மூலம் சின்மயி விமர்சித்துள்ளார்.

புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், “மே.12 அன்று 4 மணியிலிருந்து 5 மணி வரை அவரவர்கள் எங்கிருந்தாலும்,  தனியாகவோ, இருவராகவோ, குழுவாகவோ இணைந்து லைவ் வீடியோ வெளியிடுங்கள். உச்சநீதிமன்ற நீதிபதி கோகாய் பாலியல் குற்றச்சாட்டில் சார்பில்லாத, வெளிப்படையான சட்டரீதியிலான விசாரணை வேண்டும் என கேளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

அதேப்போன்று போலீஸ் அனுமதி மறுத்ததை விமர்சித்து “சாதாரண ஒரு பெண் சக்திமிகு மனிதரால் பாலியல் வழக்கு விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுமாம். ஹும்” என்று விமர்சித்து போட்டுள்ளார்.

மேலும் “சென்னை போலீஸார் பெண்கள் அவர்கள் சட்ட உரிமைக்காக போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் எதற்கு அஞ்சுகிறீர்கள், ஆனால் ஹைதராபாத் போலீஸார் அனுமதிக்க எந்த பிரச்சினையும் இல்லை” என ஒரு அமைப்பு பதிவிட்டுள்ளதை ரீட்வீட் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு விவகாரத்தில் அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வீடியோ லைவ் கொடுத்து நியாயம் கேளுங்கள் என போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததன்மூலம் புதிய பரபரப்பை சின்மயி ஏற்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x