Published : 10 Apr 2014 12:16 PM
Last Updated : 10 Apr 2014 12:16 PM

போலி வழக்கறிஞர்கள் களையெடுக்கப்படுவார்களா?

சென்னை பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு கட்சியை சேர்ந்த நபர் தாராளமாக செலவு செய்ய, அவரது புகழும் வேகமாக பரவியது. கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நிலமோசடி என அவருக்காக செய்யப்பட்ட குற்றங்களும், அவரது அடியாட்கள் செய்த குற்றங்களும் காவல் நிலையங்களில் பட்டியலிட்டு வைக்கும் அளவிற்கு பெரியது.

பெரும்பாலான குற்றங்களை பண பலத்தால் மறைத்தாலும், சில போலீஸ் அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைகளால் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு களுக்காக இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் தினமும் நீதிமன்றத் துக்கும், காவல் நிலையத்துக்கும் வருகின்றனர்.

காவல் நிலையத்தையும், நீதி மன்றத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், எந்த கவலையும் இல்லாமல் நினைத் ததை செய்யலாம் என்பதற்காக இவர்கள் போட்ட திட்டமும், அதை செயல்படுத்திய விதமும் அதிர வைக்கிறது.

தனது அடியாட்களையும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்த வர்களையும் வழக்கறிஞர்களாக மாற்றிவிட்டால், காவல் நிலை யத்திலும், நீதிமன்றத்திலும் அதி காரத்தை பலப்படுத்தி விடலாம். இதன் மூலம் குற்றங்களை பயமில்லாமல் செய்ய முடியும். தண்டனையில் இருந்தும் தப்பித்து விடலாம் என்பதுதான் இவர்களின் திட்டம்.

ஆனால் வழக்கறிஞர் படிப்பை முழுமையாக படித்து முடித்து, தேர்வெழுதி தேர்ச்சி பெற இவர்களால் முடியாது. அதற்கான அறிவும் அவர்களிடம் இல்லை. எனவே ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் உள்ள சில சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கூடுதலாக பணம் கொடுத்து சான்றிதழ் பெறுகின்றனர். சட்டம் படித்து முடித்ததாக சான்றிதழ் பெறும் இவர்களுக்கு வாதாட தெரியாது. கட்டப் பஞ்சாயத்தும், ரவுடித்தனமும் நன்றாக செய்வார்கள்.

இப்படி குறுக்கு வழியில் பெறும் பட்டத்தை பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக வலம் வருகின்றனர். இப்படி 300-க்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்களை உருவாக்கியிருக்கிறாராம் அந்த கட்சிக்காரர். தனது அணியை சேர்ந்த ஒருவருக்கு பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டத்தை கூட்டி காவல் துறையையே திக்குமுக்காட வைப்பது இவர்களின் ஸ்டைல். இப்படி பின்வாசல் வழியாக சான்றிதழ் பெற்றவர்கள்தான் தண்டையார்பேட்டை, ராயபுரம், எம்கேபி நகர் காவல் நிலை யங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் உணர்ந்த பார் கவுன்சில், போலி வழக்கறிஞர்களை களையெடுக்க தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் வாதாடாமல் காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் வழக்கறிஞர்களை கண்டு பிடித்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.

வழக்கறிஞரும், துப்பறியும் நிறுவன இயக்குநருமான ஆர்.வரதராஜன் கூறும்போது, "சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இருக்கும் கண்ணியத்தை பல வழக்கறிஞர்கள் மறந்துவிட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் நல்லவர்களும், திறமையானவர்களும் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காவல் நிலையம் சென்று பிரச்சினை செய்வதில்லை. போலியாக பட்டம் பெற்றவர்கள்தான் பிரச்சினைகளுக்கு முதல் காரணம்.

'சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞர்களின் வாதம்தான் விளக்கு' என்று அறிஞர் அண்ணா கூறினார். இதற்கு ஏற்றபடி நடப்பவர்கள் மிகக் குறைவானவர்கள்தான். குற்றவாளிகள் என்று தெரிந்தும் சிலர் அவர்களுக்காக காவல் நிலையம் சென்று கலாட்டா செய்வது தண்டிக்கப்படவேண்டிய விஷயம். போலி சான்றிதழை பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

"நீதிமன்றத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி `நீதிமன்ற ஒழுக்க பாதுகாப்பு குழு' என்ற அமைப்பை மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x