Published : 19 May 2019 02:26 PM
Last Updated : 19 May 2019 02:26 PM
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக செய்தி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாபு முருகவேல் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அரவக்குறிச்சி தொகுதியில் தொட்டிக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளார். இது நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.
எனவே செந்தில்பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT