

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது சுப்பிரமணியபுரம் என்ற கிராமத்தில் ஒரு பெண்மணி கண்கலங்கி நிற்பதைப் பார்த்திருக்கிறார்.
உடனே அந்தப் பெண்ணை தன்னருகே அழைத்து விசாரித்திருக்கிறார்.
“என்னோட 16 வயசுப் புள்ள மகராசன் கிட்னி பாதிச்சு ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்கான். ஏழையான எங்களுக்கு அவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வழியில்ல. நீங்க டாக்டருன்னு சொன்னாங்க. அதான்...” என்று சொல்லிவிட்டு கதறியிருக்கிறார் அந்தப் பெண்மணி.
“நான் மட்டுமில்லம்மா... என்னோட கணவரும் டாக்டர் தான். அதுவும் கிட்னிக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர். அவருக்கிட்ட சொல்லி உங்க பையனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை குடுக்க ஏற்பாடு பண்றேன்” என்று சொன்ன தமிழிசை. அதன்படியே தனது கணவரின் நண்பரான இன்னொரு மருத்துவரின் உதவியுடன் மகராசனை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
தேர்தலோடு அதை மறந்துவிடாமல், கடந்த வாரம் தொகுதிக்கு வந்தபோது மருத்துவ மனைக்குச் சென்று மகராசனை உடல் நலம் விசாரித்துச் சென்றிருக்கிறார் தமிழிசை.